புதுடெல்லி: இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் விமானங்களின் கட்டணம் செப்டம்பர் 13-ம் தேதிக்குப் பிறகு கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சமீப காலமாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் விமான கட்டணம் அதிகரித்திருந்தது. அங்கு பள்ளிகள் திறக்க உள்ளதுடன், நிறுவனங்களில் பணியில் சேருவதற்கான காலக்கெடுவும் நெருங்கி வருவதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக விமான கட்டணம் உயர்ந்ததால் நடுத்தர குடும்பத்தினர் கடும் நிதிச்சுமையை எதிர்கொண்டனர். பலர் நேரடி விமானங்களை தவிர்த்து, மாற்று வழிகளில் பயணம் செய்வது குறித்து ஆலோசிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் செப்டம்பர் 13-ம் தேதிக்குப் பிறகு கட்டணம் 49 முதல் 64 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 30-ம் தேதி ரூ.54,310 ஆக இருந்த சில விமானங்களின் கட்டணம், செப்டம்பர் 13-க்கு பிறகு சுமார் ரூ.23 ஆயிரமாக குறைய வாய்ப்புள்ளதாக தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்லும் விமானங்களின் கட்டணமும் குறையக்கூடும். இதன் மூலம் பயணிகள் சுமார் 1,200 ஏஇடி வரை சேமிக்க முடியும் என கூறப்படுகிறது.
பெங்களூருவில் இருந்து செல்லும் விமான கட்டணம் 2,513 ஏஇடி-யில் இருந்து 914 ஏஇடியாகவும், டெல்லியில் இருந்து 2,227 ஏஇடியில் இருந்து 825 ஏஇடியாகவும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஐதராபாத்தில் இருந்து 1,777 ஏஇடியில் இருந்து 758 ஏஇடியாகவும், மும்பையில் இருந்து 1,460 ஏஇடியில் இருந்து 739 ஏஇடியாகவும் கட்டணம் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
