காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 903 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,247 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 5 நாட்கள் கடந்துள்ள நிலையில், மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உடல்கள் கிடைக்காததால் பல உயிரிழப்புகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
காணாமல் போன 4,247 பேரில் 591 பேர் வெளிநாட்டினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் 6 நீர்மின் திட்டங்களில் மட்டும் 933 தொழிலாளர்கள் சிக்கியிருக்க வாய்ப்புள்ளதாகவும், அவர்களை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேபாள பிரதமர் பலேந்திர ஷா, நாடு கற்பனை செய்ய முடியாத பேரழிவை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்தார். போட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்கள், சொத்துகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களை முழுமையாக கணக்கிடுவது கடினமாகியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மோசமான வானிலை, கடினமான நிலப்பரப்பு மற்றும் தொடர்ச்சியான அபாயங்கள் மீட்புப் பணிக்கு சவாலாக இருந்தாலும், பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
84 தமிழர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை
நேபாளத்தில் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ள 84 தமிழர்களையும் மீட்டு தமிழகத்துக்கு அழைத்து வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
கிடைத்த தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த 305 பேர் கைலாய யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். அவர்களில் 220 பேர் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 84 பேரை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்தியாவின் பிற மாநிலங்கள் வழியாக நேபாளம் சென்ற 34 தமிழர்கள் குறித்த தகவல்களும் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். திபெத் மற்றும் சீனாவுடனும் மத்திய அரசு ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
தமிழக அரசு சிறப்புக் குழு
நேபாளத்தில் காணாமல் போன தமிழர்களின் உறவினர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சார்பில் 3 அலுவலர்கள் கொண்ட குழு காத்மாண்டுவில் முகாமிட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த 21 சுற்றுலாப் பயணிகள் ஏற்கனவே மீட்கப்பட்டு புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
நேபாள காவல்துறை வெளியிட்டுள்ள காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை அறியவும், உறவினர்களுக்கு தேவையான உதவிகளை ஒருங்கிணைக்கவும் தமிழக அரசு குழு செயல்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 262 பேர் சிக்கல்
நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பகுதியில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 262 பேர் சிக்கியுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் 144 பேர் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
