கோவை ஒண்டிப்புதூரில் திறந்தவெளி சிறை இருந்த இடத்தில் சுமார் 20.72 ஏக்கர் நிலப்பரப்பில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது. கோவையில் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் ஏற்கனவே ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நகரின் முக்கிய பசுமைப் பகுதியான திறந்தவெளி சிறையில் உள்ள நூற்றுக்கணக்கான மரங்களை கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டுவதற்காக அழிக்கப் போவதாக பசுமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்துப் பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு. பழனிசாமி கூறுகையில், “1981-ல், ஒண்டிப்புதூரில், 30 ஏக்கர் பரப்பளவில் திறந்தவெளி சிறைச்சாலை அமைக்கப்பட்டது. இங்கு தற்போது 950 தென்னை மரங்கள் உள்ளன. மேலும் சில மரங்களும் உள்ளன. மேலும், பல ஏக்கரில் காய்கறிகளும் பயிரிடப்பட்டுள்ளன. கிரிக்கெட் மைதானம் கட்டுவதால் இங்குள்ள விவசாய உள்கட்டமைப்பு பாதிக்கப்படும். போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த இடத்திற்கு பதிலாக நீலம்பூர், சின்னியம்பாளையம் உள்ளிட்ட எந்த பகுதியில் மைதானம் அமைத்தால், யாருக்கும் பாதிப்பு இல்லை; கோவையின் பசுமை பாதிக்கப்படாது. இதுகுறித்து கோவை நகர மாவட்ட திமுக செயலாளரும், சிங்காநல்லூர் முன்னாள் எம்எல்ஏவுமான நா.கார்த்திக் பேசுகையில், ”கோவையில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது. இதன் மூலம் விளையாட்டுத் துறையில் கோவை அடுத்த கட்டத்துக்கு முன்னேறும்.
விளையாட்டுத் துறையில் கோவைக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்கும். மைதானம் கட்டினால், பலருக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த இடம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பில்லை. வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாக அதிகளவில் மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது. அதனால், கோவையின் பசுமைச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடியோ கூறுகையில், ”திறந்தவெளி சிறை வளாகத்தில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைந்துள்ளது. அங்குள்ள மரங்களை வெட்டும்போது அதற்கு ஈடாக லட்சக்கணக்கான மரக்கன்றுகள் நடப்பட்டு கோவையின் பசுமையான சூழல் பாதுகாக்கப்படும். கிரிக்கெட் மைதானத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தயாரித்து வருகிறது. மண் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அரசு ஒப்புதல் அளித்த பின், அடுத்தகட்ட பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார். தங்க நாற்கர சாலைத் திட்டத்துக்காக நூற்றாண்டு பழமையான மரங்களை வெட்டி நடுரோட்டில் பூச்செடிகள் போடுவது போல் அல்லாமல் சம்பந்தப்பட்டவர்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும்!