புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகின. பெரும்பாலான நிறுவனங்கள் வெளியிட்ட பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது. டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் வரும் 23-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து டெல்லி சட்டசபை தேர்தலை தேர்தல் ஆணையம் நேற்று நடத்தியது.
மதுக்கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்த டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தனது நேர்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்திய பிறகே முதல்வர் ஆவேன் என்று சபதம் ஏற்று பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். பாஜகவை கடுமையாக விமர்சித்தார். இதேபோல் டெல்லியில் ஆட்சியை பிடிக்க பாஜக மூத்த தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
பிரசாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலை பிரதமர் மோடி விமர்சித்தார். டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முனைப்புடன் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியது. 3 கட்சிகளின் தீவிர பிரசாரம் கடந்த 3ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது. டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளில் 1.56 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க 13,766 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் பாதுகாப்புக்காக ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டனர்.
இங்கு நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்தது. நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 57.7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
நேற்று மாலை சட்டசபை தேர்தல் முடிவடைந்ததையடுத்து, வழக்கம் போல் வெளியாகின. டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகளில் ஆம் ஆத்மி கட்சி 32 முதல் 37 இடங்களையும், பாஜக 37-43 இடங்களையும், காங்கிரஸ் 2 இடங்களையும் கைப்பற்றும் என்று கணித்துள்ளது. என்டிடிவி வெளியிட்ட முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி 10 முதல் 19 இடங்களையும், பாஜக 51-60 இடங்களையும் கைப்பற்றும் என்று கணித்துள்ளது.
சிஎன்என் வெளியிட்ட முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சி 30 இடங்களிலும், பாஜக 40 இடங்களிலும் வெற்றி பெறும் என்று கணித்துள்ளது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் பாஜக வெற்றி பெறும் என்று கணித்துள்ளன. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.