தஞ்சாவூர்: மணல் குவாரியை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தஞ்சாவூரில் தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி, கட்டுமான தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில், மணல் இல்லாததால் கட்டுமானப் பணிகள் தொய்வடைந்து, தொழிலாளர்கள் வேலை இழந்து சிரமப்படுகின்றனர். எனவே, மணல் குவாரியை உடனே திறந்து வினியோகம் செய்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும். விவசாயிகளுக்கு விளைபொருட்கள் விலை உயர்ந்து வருவதால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாய வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஊதியம் நாளொன்றுக்கு ரூ. 400 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஏ. ஆரோக்கியசாமி தலைமை வகித்தார். தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன். குமார், விவசாய தொழிலாளர் கட்சி மாநிலப் பொதுச் செயலர்கள் எஸ். ஜெகதீசன், ஜெக முருகன், கட்டுமான மாநில அமைப்பு செயலர் எம். நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
அமைப்புசாரா மாவட்டச் செயலர் ஆர். விக்டர், மகளிரணி மாவட்டத் தலைவர் எம். செல்வி, அமைப்பு சாரா மாவட்ட தலைவர் கே. குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பனகல் கட்டடம் முன் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி சார்பில் இந்தி திணிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.