சென்னை: தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி திங்கள்கிழமை முதல் நடைபெறுகிறது. பிளஸ் 1 பொதுத்தேர்வு நாளை முதல் மார்ச் 27-ம் தேதி வரை நடக்கிறது. தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வு முதல் நாள் நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,316 மையங்களில் 8.23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில் 7,557 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 18,369 மாணவர்களும், 4,755 தனித் தேர்வர்களும், 137 கைதிகளும் அடங்குவர்.
பொதுத் தேர்வுக்கு 44,236 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவார்கள். மேலும், முறைகேடுகளைத் தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர் தலைமையில் முதன்மை மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையில் சிறப்புக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுமார் 154 வினாத்தாள் சேமிப்பு மையங்களில் 24 மணி நேர பாதுகாப்புக்காக ஆயுதம் தாங்கிய போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், விளக்குகள் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறந்த முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஹால் டிக்கெட் விதிகளை பின்பற்ற வேண்டும். விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு பேனாவால் மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் வண்ண பென்சில் அல்லது பேனாவால் எழுதக் கூடாது. அதேபோல, விடைத்தாளில் சிறப்புக் குறியீடுகள், தேர்வு எண்கள், பெயர்களைக் குறிப்பிடக் கூடாது. முதன்மை விடைத்தாளுடன் மாணவரின் புகைப்படம், பதிவு எண், பாடம் போன்றவற்றுடன் அட்டை தாள் வழங்கப்படும். மாணவர்கள் அதை சரிபார்த்து கையொப்பமிட்டால் போதும். மேலும், அறை கண்காணிப்பாளர் விடைத்தாள்களை பிரிக்க வேண்டும்.
ஒரு மாணவர் ஆள்மாறாட்டம் செய்தல், காகிதத்தில் எழுதுதல் அல்லது மற்ற மாணவர்களைப் பார்ப்பது, தேர்வு அதிகாரியிடம் தவறாக நடந்துகொள்வது, பொதுத் தேர்வில் விடைத்தாளை மாற்றுவது போன்ற முறைகேடான செயல்களில் ஈடுபட்டால், அந்த மாணவர் மீது விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரத் தடை விதிக்கப்படும். மேலும், பள்ளி நிர்வாகம் முறைகேடான செயல்களை ஊக்குவிக்க முயன்றால், அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
மேலும், பொதுத்தேர்வு தொடர்பான புகார்கள் மற்றும் கருத்துகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவிக்க வசதியாக தேர்வு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கட்டுப்பாட்டு அறை செயல்படும். 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பள்ளிக் கல்வித் துறையின் 14417 என்ற இலவச உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.