நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) மூலம் சேர்க்கை நடத்தப்படுகிறது.

இதேபோல் ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு முகமை (என்டிஏ) மூலம் ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, 2025-26-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படும். இந்தத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி முடிவடைந்தது.
இதில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், விண்ணப்பத்தில் திருத்தம் செய்வதற்கான அவகாசம் நேற்று துவங்கியது. மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் மூலம் நாளை வரை திருத்தம் செய்யலாம். இது பற்றிய கூடுதல் தகவல்களை https://nta.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால், 011-40759000 என்ற தொலைபேசி எண்ணையோ அல்லது neet@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தெளிவுபடுத்தவும். ஹால் டிக்கெட் மே 1-ம் தேதி வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் ஜூன் 14-ம் தேதி வெளியிடப்படும் என என்டிஏ தெரிவித்துள்ளது.