ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானுக்கு அங்கபிரதக்ஷணம் உள்ளிட்ட பல்வேறு ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனங்களுக்கான டிக்கெட் விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறித்த விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது.
அதன்படி, லாட்டரி முறை மூலம் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளை பெற, இன்று காலை 10 மணி முதல் 18-ம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்யலாம். அதிர்ஷ்டவசமாக, டிக்கெட் பெற்ற பக்தர்கள், 22-ம் தேதி மதியம் 12 மணிக்குள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி, அதற்கான டிக்கெட்டுகளை மொபைல் போன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் திருக்கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோத்ஸவம், ஊஞ்சல் சேவை, சஹஸ்ர தீப ஆரணக சேவை போன்ற சேவைகளுக்கு இம்மாதம் 21-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பதிவு செய்யலாம்.

திருமலையில் ஜூன் 9 முதல் 11-ம் தேதி வரை ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது. இதில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் வரும் 21-ம் தேதி காலை 11 மணிக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு ஏழுமலையானை தரிசனம் செய்யும் பாக்கியத்தையும் தேவஸ்தானம் வழங்கும். ஜூன் மாதம் அங்கபிரதட்சணம் செய்ய விரும்பும் பக்தர்கள் அதற்கான இலவச டோக்கன்களை 22-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கான டிக்கெட்டுகள் 22-ம் தேதி காலை 11 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
இதையடுத்து, மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான டோக்கன்கள் வரும் 22-ம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஜூன் மாதத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்களுக்கு ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைன் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிடுகிறது.
அதே நாளில் மாலை 3 மணிக்கு திருப்பதி மற்றும் திருமலையில் உள்ள கோயில் ஹோட்டல்களில் அறைகளுக்கு பக்தர்கள் ஆன்லைனில் முன் பதிவு செய்து கொள்ளலாம். அனைத்து பக்தர்களும் திருப்பதி தேவஸ்தானத்தின் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், மற்ற போலி இணையதளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.