சென்னை: சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சுவாமி விவேகானந்தரின் வழிகாட்டுதலின் கீழ் 1897-ல் நிறுவப்பட்டது. இந்த மடத்தின் முக்கிய சேவைகளில் ஒன்றான தர்ம மருத்துவமனை 1925-ம் ஆண்டு டாக்டர் பி.ராகவேந்திர ராவால் தொடங்கப்பட்டது. குறைந்த செலவில் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம். இந்த மருந்தகத்தில், அனைத்து நோயாளிகளுக்கும் மருத்துவ ஆலோசனை மற்றும் ஒரு ரூபாய்க்கு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது.
எக்ஸ்ரே மற்றும் ரத்தப் பரிசோதனைக்கு வெளியில் ரூ. 500, இங்கு ரூ.50 கட்டணத்திலேயே செய்து கொள்ளலாம். இங்கு, பல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம், நரம்பியல், எலும்பியல், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை, குழந்தை மருத்துவம், தோல், இரைப்பை குடல் நோய்கள், நீரிழிவு சிகிச்சை, இதய நோய்களுக்கான சிகிச்சைக்கு ஈசிஜி, எக்கோ கார்டியோகிராம், அல்ட்ராசோனோகிராம் போன்ற வசதிகள் உள்ளன. அதேபோல், பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, அக்குபஞ்சர் போன்றவையும் இங்கு வழங்கப்படுகின்றன.

இங்கு தினமும், 600 முதல், 800 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 2023-24-ம் ஆண்டில் மட்டும் 3,41,000 பேர் இங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இங்கு 74 பகுதி நேர மருத்துவர்கள், 50 தன்னார்வலர்கள், 14 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே, கடந்த 12 ஆண்டுகளாக சென்னையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பாதி செலவில் மருத்துவப் பரிசோதனை செய்யப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு பாதி செலவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சுவாமி தபஸ்யானந்தர் அவர்களின் முயற்சியின் கீழ் கடந்த 37 ஆண்டுகளாக தொழுநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை மற்றும் மறுவாழ்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்கு வரப்பிரசாதமாக விளங்கும் இந்த சிறப்பு மருத்துவமனை மார்ச் 22-ம் தேதி நூற்றாண்டு விழாவைக் கொண்டாட உள்ளது. இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா இயக்கத்தின் உலகளாவிய தலைவர் சுவாமி கவுதமானந்தஜி மகராஜ் கலந்து கொள்கிறார். 100 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்த மருத்துவமனையின் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.