தஞ்சாவூர்: கேழ்வரகு சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டு சிறந்த லாபம் பெற வேண்டும் என்று வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.
கேழ்வரகு பயிரிட ஏற்ற பட்டம்: ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம். இரகங்கள்: கோ 9, 13, கோ (ரா) 14, கோ15
நிலம் தயாரித்தல்: நிலத்தை இரண்டு முறை நன்கு உழவு செய்த பின்பு மூன்றாவது உழவில் தொழுஉரம் இட வேண்டும்.
விதை நேர்த்தி: பொட்டாசியம் டை ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊற வைத்து உலர்த்திய பின் விதைக்க வேண்டும்.
நாற்றங்கால் விதைப்பு: நாற்றங்கால் முறையில் பயிரிட ஹெக்டருக்கு 5 கிலோ விதையளவும், நேரடி விதைப்பிற்கு 10 முதல் 15 கிலோ விதையளவும் தேவைப்படுகின்றன.
நடவு: 18 முதல் 21 நாட்கள் வயதுடைய நாற்றுகளை குத்துக்கு இரண்டு அல்லது மூன்று நாற்றுகள் வீதம் 15×15 செமீ. (அ) 22.5:10 செ.மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
உர நிர்வாகம் மற்றும் நுண்ணுயிர் உரங்கள்: பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை. மணி, சாம்பல் சத்துக்களை ஹெக்டருக்கு முறையே 90:45:45 கிலோ இடவேண்டும். 10 பொட்டலம் (2000 கிராம்) அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் பாஸ்போ பாக்டீரியத்தை மக்கிய தொழுஉரத்துடன் கலந்து ஒரு ஹெக்டர் நிலத்தில் பரப்பலாம்.
இறவையில் 5 பாக்கெட் அசோஸ்பைரில்லத்தை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு ஹெக்டருக்குத் தேவையான நாற்றுக்களை 15-30 நிமிடம், வேர் மூழ்கும்படி நனைத்து நடவு செய்யலாம்.
களை நிர்வாகம்: விதைத்த அல்லது நட்ட 18ம் நாள் ஒரு களையும், 45ம் நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும். (அ) ஒரு ஹெக்டருக்கு இரண்டு லிட்டர் பியூட்டாகுளோர் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து நாற்று நட்ட மூன்றாம் நாள் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.
நோய்கள்: கேழ்வரகினை குலை நோய், செம்புள்ளி, தேமல் நோய் தாக்கலாம். குலை நோயினைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டருக்கு 500 கிராம் கார்பென்டசிம் மருந்தினை நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
செம்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த ஒரு ஹெக்டருக்கு எடிபென்பாஸ் 500 மில்லி அல்லது மேன்கோசெப் 1கிலோ என்ற அளவில் நீருடன் கலந்து தெளிக்க வேண்டும். தேமல் நோயினைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளை முதலில் அகற்றவும். இந்நோய் தத்துப்பூச்சிகளால் பரவுவதால் அதைக்கட்டுப்படுத்த மோனோகுரோட்டோபாஸ் 0.05 சதவீதம் (500 மிலி/ஹெக்டர்) நோய் தோன்றியவுடன் தெளிக்க வேண்டும். தெளித்த 15 நாட்களில் மறுமுறையும் தெளித்தால் நோய் முற்றிலும் கட்டுப்படும்.
அறுவடை: கதிர்கள் நன்கு முற்றி காய்ந்த பிறகு அறுவடை செய்யலாம்.