தஞ்சாவூர்: தஞ்சாவூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் 57 அடி உயர அங்காள முனீஸ்வரன் கோயிலுக்கு 27 அடி உயரத்தில் அமைக்கப்படும் அரிவாளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
தஞ்சாவூர் விளார் சாலையில் பர்மா காலனி அருகே அங்காள முனீஸ்வரன் கோயில் புதிதாகக் கட்டப்பட்டு வருகிறது. பக்தர்களின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்படும் இக்கோயிலில் 57 அடி உயரத்துக்கு அங்காள முனீஸ்வரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, அங்காள முனீஸ்வரனுக்காக 216 கிலோ எடையில் 27 அடி உயரம், 3 அடி அகலத்தில் பித்தளை முலாம் பூசப்பட்ட அரிவாள் கும்பகோணத்திலுள்ள சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த அரிவாள் தஞ்சாவூருக்கு கிரேன் மூலம் கொண்டு வரப்பட்டது. பர்மா காலனி எல்லையில் இந்த அரிவாளுக்கு பக்தர்கள் மஞ்சள், சந்தனம் பூசி, குங்குமம் இட்டு, மாலை சூடி சிறப்பு பூஜை செய்தனர். மேலும், அரிவாளை அங்க வஸ்திரத்தால் சுற்றி, அதன் முனையில் வெள்ளைப் பூசணிக்காயை சொருகி வைத்து வழிபட்டனர்.
பின்னர், இந்த அரிவாளை பக்தர்கள் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்துச் சென்றனர். இக்கோயிலில் திருப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி திருக்குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.