இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தின் தேதியை மாற்ற உள்ள பிசிசிஐ
மும்பை: 50 ஓவர் உலக கோப்பை தொடர் இந்தியாவில் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. சொந்த மண்ணில் உலகக் கோப்பையை வெல்ல இந்தியா கடுமையாக முயற்சித்து வருகிறது. உலக கோப்பை தொடருக்கான போட்டிகள் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
அதன்படி, தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோதுகின்றன. இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் சந்திக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் அக்டோபர் 15ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் அக்டோபர் 15ம் தேதிக்கு பதிலாக வேறு தேதிக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் 15ம் தேதி நவராத்திரி கொண்டாட்டத்தின் முதல் நாள் என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக போட்டியை வேறு தேதிக்கு மாற்ற பிசிசிஐக்கு பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இந்த கோரிக்கையை ஏற்று இந்தியா- பாகிஸ்தான் ஆட்டத்தின் தேதியை பிசிசிஐ மாற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 15ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 14ம் தேதி நடைபெறலாம் என புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.