ஐ,தே.கட்சிக்கும், இ.தொ.காங்கிரசிற்கும் இணக்கப்பாடு; உள்ளூராட்சி தேர்தலில் கூட்டணி
கொழும்பு: உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும் கூட்டணியாக போட்டியிடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு கட்சிகளும் ஒன்பது முதல் 10 உள்ளூராட்சி மன்றங்களில் யானை சின்னத்திலும், 11 முதல் 12 வரையான பிரதேச சபைகளில் சேவல் சின்னத்திலும் போட்டியிடவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், தேர்தல் உடன்படிக்கை இரு கட்சிகளுக்கும் நன்மை பயக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.