சென்னை: சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் ஹைதராபாத் அணி நுழைந்துள்ளது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
19 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் நடப்பு ஐ.பி.எல்.தொடரின் 63-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் 5 முறை சாம்பியனான சென்னை அணி, முன்னாள் சாம்பியனான ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சென்னை அணிக்கு சாம்சன் அதிரடி துவக்கம் கொடுத்தார். இதன் மூலம் 2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 30 வந்தது. அப்போது கம்மின்ஸ் வீசிய 3-வது ஓவரில் அதிரடியாக ஆடிய சாம்சன் அவுட்டானார்.
இறுதியில் 20 ஓவர்கள் முடியில் 7 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிரேவிஸ் 44(27) ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் தரப்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இதையடுத்து 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் விளையாடியது. அந்த அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட், 6 ரன்களில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். இதையடுத்து இஷான் கிஷனுடன் அபிஷேக் சர்மா ஜோடி சேர்ந்தார்.
இதில் அபிஷேக் சர்மா 26 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் ஹைதராபாத் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பெங்களூரு அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த நிலையில், இன்றைய ஆட்டத்தின் மூலம் ஐதராபாத் மற்றும் குஜராத் அணிகள் பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.