புதுடெல்லி: தாய்லாந்தின் புகெட் நகரில் இருந்து டெல்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் திடீரென 300 அடி கீழே இறங்கிய சம்பவத்தில், விமானி கஞ்சா பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி 137 பயணிகள் மற்றும் 8 விமானப் பணியாளர்களுடன் ‘ஏஐ-2379’ விமானம் டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது. விமானம் திடீரென கீழிறங்கியதில் 20 பயணிகள், 4 பணியாளர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
விமானிக்கு நடத்தப்பட்ட இரண்டு கட்ட மருத்துவப் பரிசோதனைகளிலும் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. விமானத்தில் ஆபத்து எச்சரிக்கை ஒலித்தபோது, முதன்மை விமானி காக்பிட் தரையில் அமர்ந்த நிலையில் இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்துக்குப் பின்னர் பயணிகளைப் பார்க்க வந்த விமானி ஒரு காலில் ஷூ, சாக்ஸ் இல்லாமல் இருந்ததாகவும், தன்னை யாரும் வீடியோ எடுக்க வேண்டாம் எனக் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கிய பின்னரும் அவரால் நேராக நிற்க முடியாத நிலை இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சிறுநீர் மாதிரி வழங்குவதற்காகவும் புலனாய்வு அதிகாரியின் உதவியுடன் அவர் அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புகெட்டில் தங்கியிருந்த 24 மணி நேரத்துக்குள் அவர் விருந்துக்குச் சென்றதாகவும், அங்கு கஞ்சா புகைத்ததாக சக ஊழியர் புகார் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
