புதுடில்லி: தடை விதிக்க முடியாது… தணிக்கை சான்று பெற்ற ‛தக் லைப்’ படத்தை மொழி விவகாரத்தை காரணம் காட்டி கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடிப்பில் ஜூன் 5ல் வெளியான படம் ‛தக் லைப்’. முன்னதாக இப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ‛‛தமிழ் மொழியில் இருந்து தான் கன்னடம் பிறந்தது” என்றார். இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. அம்மாநில முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், கன்னட அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தனர்.
கர்நாடகாவில் இந்த படத்தை திரையிட கன்னட வர்த்தக சபை தடை விதிப்பதாக அறிவித்தது. இதை எதிர்த்து கமல் நிறுவனம் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதி, ‛‛எதன் அடிப்படையில் தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என கமல் கூறுகிறார். அதற்கு ஆதாரம் உள்ளதா… என கேட்டதோடு கமல் மன்னிப்பு கேட்டால் படத்தை திரையிடலாம்” என கூறினார். ஆனால் கமல் மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார். இதனால் கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை.
இதற்கிடையில் மகேஷ் ரெட்டி என்பவர், “கர்நாடகாவில் ‘தக் லைப்’ படத்திற்கு கன்னட சினிமா வர்த்தக சபை தடை விதித்துள்ளதாகவும், இது நீதித்துறையின் அதிகாரத்தை மீறியது ஆகும் என்றும், அதனால் இந்த தடையை நீக்கி படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதை ஏற்ற உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டு கர்நாடக அரசு, கன்னட சினிமா வர்த்தக சபைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதி, ‛‛உரிய தணிக்கை சான்று பெற்ற தக் லைப் படத்தை மொழி விவகாரத்தை காரணம் காட்டி கர்நாடகாவில் தடை விதிக்க முடியாது. படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக வியாழக்கிழமைக்குள் கர்நாடக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
மேலும் கமலின் பேச்சுக்காக அவரை மிரட்டுவதை அனுமதிக்க முடியாது, அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறுவது ஐகோர்ட்டின் வேலை கிடையாது என நீதிபதி தனது கண்டனத்தையும் தெரிவித்தார்.