சென்னை: சென்னையில், மாநகர போக்குவரத்து கழகம், 630 வழித்தடங்களில், 3,200 பஸ்களை இயக்குகிறது.இதில், தினமும், 32 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். மேலும், மாநகரில் போக்குவரத்து தேவை அதிகரித்து வருவதாலும், காலாவதியாகும் பஸ்களை மாற்ற வேண்டியதாலும், தேவைக்கு ஏற்ப புதிய பஸ்கள் வாங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் ஆண்டுதோறும் புதிய மாநகர மற்றும் புறநகர் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் புதிதாக வாங்கப்பட்ட தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காலத்துக்கு ஏற்ப சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வகையில், நகர்ப்புற போக்குவரத்து பயன்பாட்டுக்கு நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஜெர்மன் வங்கியின் நிதியுதவியுடன், 2023-ல், 500 எலக்ட்ரிக் பஸ்களை வாங்க, தமிழகத்தில் டெண்டர் விடப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 12 மீட்டர் நீளமுள்ள 500 தாழ்தள மின்சார பேருந்துகளை வாங்க தமிழக அரசு டெண்டர் கோரியது. மேலும், இரண்டாம் கட்டமாக, மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு, 600 மின்சார தாழ்தளப் பேருந்துகளை வாங்க, பிப்ரவரி மாதம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் டெண்டர் கோரியது. சென்னையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 625 மின்சார பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜூன் மாதம் முதல்கட்டமாக 100 பேருந்துகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னையில் பயன்பாட்டுக்கு வரும் பேருந்துகளை அமைச்சர் சிவசங்கர் மற்றும் அதிகாரிகள் சில வாரங்களுக்கு முன் ஆய்வு செய்தனர். பேருந்துகள் தயார் நிலையில் உள்ளதால், அவற்றை இயக்குவதற்கான உள்கட்டமைப்புகளை நிறைவு செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, ஜூன் மாதம் முதல் 100 மின்சார தாழ்தளப் பேருந்துகள் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது: வியாசர்பாடி, பெரும்பாக்கம், பூந்தமல்லி, பல்லவன் இல்லம், தண்டையார்பேட்டை ஆகிய 5 பஸ் டெப்போக்களில் இருந்து பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 5 டெப்போக்களில் மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகள் முழுமையாக நிறுவப்பட்டு வருகின்றன. தாழ்தளப் பேருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளதால், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் எளிதாக ஏறி, இறங்கும் வகையில் இந்தப் பேருந்துகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக ஜூன் மாதம் 100 மின்சார பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்.