சென்னை: தமிழகத்தில் 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; நாட்டின் தெற்குப் பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு காற்று சந்திக்கும் குறைந்த அளவிலான சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் மார்ச் 24-ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புகள் குறைவு. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கலாம். சென்னையை பொறுத்த வரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26° செல்சியஸாகவும் இருக்கலாம். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.