சென்னை: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 8.22% வாக்குகளை பெற்றதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி (NTK) மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. இதனையடுத்து இந்திய தேர்தல் ஆணையம், சீமான் தலைமையிலான கட்சிக்கு ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை ஒதுக்கியது. இது கட்சிக்கே முக்கிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.நாம் தமிழர் கட்சி இதுவரை எந்தக் கூட்டணியிலும் இணைந்ததில்லை.
திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பலருடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் NTK தனித்துவத்தை நிலைநிறுத்தியுள்ளது. தமிழ் இளைஞர்களிடையே மாற்று சக்தியாக உருவெடுத்த NTKக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த சீமான், தமிழ் தேசியம் மற்றும் ஈழத்து உரிமைகளை வலியுறுத்தி வந்தார்.

இவரது பேச்சுகள் முதலில் பலரையும் ஈர்த்தன. ஆனால், காலப்போக்கில் அவரது பேச்சுகளில் மாற்றங்கள் ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.பல முக்கிய நிர்வாகிகள் கட்சியைவிட்டு விலகியது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் பெரியாரை போற்றிய சீமான் பின்னர் அவரை விமர்சிக்கத் தொடங்கினார். இது அவரை ஆதரித்த சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.இந்த சூழ்நிலையில் தேர்தல் ஆணையம் அளித்த விவசாயி சின்னம், கட்சிக்கு புதிய உயிரோட்டத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீமான் இந்த சின்னத்திற்கான வடிவத்தை நேரடியாக வரைந்து அனுப்பி, அங்கீகாரம் பெற்றுள்ளார்.அதில் அவர் மீசை மற்றும் ஹேர் ஸ்டைல் உள்ளிட்ட தனிப்பட்ட அம்சங்களை பிரதிபலிக்கவும் முயற்சி செய்துள்ளார். இந்த சின்னம், விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் NTK போட்டியிடும் அடையாளமாக இருக்கும்.இதன்மூலம் கட்சி ஒரு புதிய கட்டத்தில் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. இது சீமானின் அரசியல் பயணத்தில் முக்கியமான வெற்றியாகும்.