தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதற்கான அடிக்கல்லை சென்னையிலிருந்து காணொலி மூலம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் சோழர் அருங்காட்சியகம் கட்டப்படவுள்ள இடத்தை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பார்வையிட்டு, மரக்கன்றை நட்டார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயர் சண். இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் பெரிய கோயிலிலிருந்து மருத்துவக் கல்லூரி சாலையில் 7 கி.மீ. தொலைவிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் இந்த அருங்காட்சியகம் ரூ. 56.41 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ளது. இதில், 28 ஆயிரத்து 298 சதுர அடி பரப்பளவில் தரைத்தளமும், 24 ஆயிரத்து 380 சதுர அடியில் முதல் தளமும், 5 ஆயிரத்து 651 சது ர அடியில் இரண்டாம் தளமும் அமைக்கப்படவுள்ளது.
தரைத்தளத்தில் சோழர்களின் வம்ச வரலாறு, சங்ககால சோழர்கள், சோழர்களின் சமயப் பாதுகாப்பு, நிர்வாகம், வர்த்தகம், கருத்தரங்கக் கூடம், ஆய்வகம், முதல் தளத்தில் சோழர்களின் கட்டடக் கலை, நகரத் திட்டமிடல், நீர் வளம், நில மேலாண்மை, கலை மற்றும் பண்பாடு, சமூக அமைப்பு, பொருளாதாரம், இலக்கியம், 7டி திரையரங்கம், நூலகம் மற்றும் ஆய்வு பிரிவு, இரண்டாம் தளத்தில் சோழர்களின் கடல் வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு உறவுகள் குறித்த காட்சியகம், சோழர் கால வெண்கலப் பிரதிகள், கோயில் மாதிரிகள் உள்ளிட்டவை அமைக்கப்படவுள்ளன.
நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய இத்திட்டம், கல்வி, ஆய்வு மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் ஊக்கமாக விளங்கி, சோழ மரபின் மகத்துவத்தை அடுத்த தலைமுறைகளுக்கு பாதுகாத்து பரப்பும் சிறப்பு சின்னமாக அமையும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.