சென்னை உயர்நீதிமன்றம், நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டு ஜப்தி உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதி தீர்ப்பை நிறைவேற்ற தடை விதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் பிரபு மற்றும் ராம்குமாருக்கு பதிலளிக்க கோரப்பட்டுள்ளது.
ஜகஜால கில்லாடி திரைப்படத்தை தயாரித்த ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம், தனபாக்கியம் எண்டர்பிரைசசிடமிருந்து கடன் பெற்றது. இந்த கடனை அடைக்க தவறியதால் வழக்கொன்று தொடரப்பட்டது. மத்தியஸ்தர், படம் தொடர்பான உரிமைகளை கடன் நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து படம் மட்டுமல்லாது சிவாஜி கணேசனின் வீடும் ஜப்தி செய்யவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், அன்னை இல்லம் பிரபுவின் சொத்து என நிரூபணங்களின் அடிப்படையில் ஜப்தி உத்தரவை ரத்து செய்தார்.இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது.
வழக்கறிஞர், சொத்து உரிமை தொடர்பாக விசாரணை நடைபெறவில்லை என்றும், இடைக்கால உத்தரவை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும் வாதிட்டார்.மறுபுறம் பிரபுவின் தரப்பில், நீதிபதி தீர்ப்பு சரியானது என்றும், எந்த தவறும் நடைபெறவில்லை என்றும் வாதிடப்பட்டது. விசாரணை நீதிபதிகள், தற்காலிக தடை வழங்க முடியாது என்று தெரிவித்தனர்.மேல் முறையீட்டு மனுவில், பிரபு மற்றும் ராம்குமார் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூன் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.