பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா – 2025, திருக்குறள் கலை இலக்கிய அறிவு சார் போட்டியில் வெற்றி பெற்ற 24 மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் ரொக்கப் பரிசு, பாராட்டு சான்றிதழ் பரிசளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் சி.இராணி தலைமை வகித்தார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து, அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்துப் பேசி வினாடி வினா, விவாதப் போட்டி, உருவகக் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்து பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சியில், பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சுப.சேகர், முடச்சிக்காடு சேக் இப்றாம்ஷா பேராசிரியர்கள் முனைவர் நா.பழனிவேலு, முனைவர் ஜெயகுமார், முனைவர் அருண்மொழி மற்றும் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முன்னதாக, பேராசிரியர் முனைவர் உமா வரவேற்றாா். நிறைவாக, பேராசிரியர் முனைவர் ராஜ வினோதா நன்றி கூறினார். கல்லூரி வளாகத்தில் 50 க்கும் மேற்பட்ட புதுப்பானைகளில் சமத்துவப் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகள் அனைவரும் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் புடவை அணிந்து வந்திருந்து உற்சாகமாகமாக தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவை கொண்டாடினர். மாணவ, மாணவிகள் பங்கேற்ற நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தொடர்ந்து, பேராசிரியர்கள் அனைவருக்கும் சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பொன்னாடை அணிவித்தும், போட்டிகளில் பங்கேற்ற 150 மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரொக்கப் பரிசு வழங்கியும் கௌரவித்தார்.