தஞ்சாவூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 25 ஆயிரத்து 944 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். இவர்களில் 25 ஆயிரத்து 215 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 97.19 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட 1.39 சதவீதம் கூடுதல். இதன் மூலம், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 13 ஆவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 7 ஆவது இடத்துக்கு முன்னேற்றியுள்ளது.
மாவட்டத்தில் தேர்வு எழுதிய 12 ஆயிரத்து 151 மாணவர்களில் 11 ஆயிரத்து 670 பேரும், 13 ஆயிரத்து 793 மாணவிகளில் 13 ஆயிரத்து 545 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதாவது மாணவர்களில் 96.04 சதவீதம் பேரும், மாணவிகளில் 98.20 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 105 பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 95.77 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது, கடந்த ஆண்டை விட 2.08 சதவீதம் அதிகம். இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 12 ஆம் இடத்தில் இருந்த நிலையில், தற்போது 7 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
அரசு பள்ளிகளில் மாணவர்களில் 93.46 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர். மாவட்டத்தில் 23 அரசு பள்ளிகள் உள்பட மொத்தம் 81 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. கடந்த ஆண்டு 65 பள்ளிகள் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்ற நிலையில், தற்போது 81 ஆக அதிகரித்துள்ளது.
தஞ்சாவூர் மேம்பாலம் பகுதியிலுள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய 21 மாணவ, மாணவிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.