தூத்துக்குடி: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தற்போது ஆற்றில் 56 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தாமிரபரணி ஆறு மற்றும் வனப்பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வெள்ளம் காரணமாக தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையிலும், நெல்லையில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலைகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்ரீவைகுண்டம் திருச்செந்தூர், ஏரல்-திருச்செந்தூர் சாலையும் மழை வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படுகின்றன. இந்நிலையில் கனமழை காரணமாக 2 நாட்களுக்கு திருச்செந்தூர் கோவிலுக்கு பக்தர்கள் செல்வதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வேண்டுகோள் விடுத்துள்ளார். மழை மற்றும் வெள்ளம் காரணமாக வெளியூர் பக்தர்கள் 2 நாட்களுக்கு கோயிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.