சென்னை: இலங்கை கடற்படையால் தற்போது கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 32 பேரையும், அவர்களது 5 படகுகளையும் மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையை மத்திய அரசு கண்டிக்க வேண்டும். எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி விட்டது.
இது வேதனை அளிக்கிறது. அந்த வகையில் தற்போது மேலும் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து வழக்கம் போல் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 32 பேரையும் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 5 மோட்டார் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் ராமேஸ்வரம் பகுதி மீனவ குடும்பங்கள் மிகுந்த கவலையில் உள்ளனர்.
காரணம் வருமானம் ஈட்ட முடியாமல் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக, சமீபத்தில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். அது பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மேலும் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கு இலங்கை அரசின் முறையற்ற நடவடிக்கைகளே காரணம்.
எனவே, மத்திய அரசு இலங்கை அரசை தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 32 பேரையும் விடுவிக்கவும், அவர்களது 5 மோட்டார் படகுகளையும் ஒப்படைக்க வலியுறுத்த வேண்டும். தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை பாதுகாக்க தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படாமல் இருக்க இலங்கை அரசுடன் மத்திய அரசு கடுமையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.’ இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.