ஈரோடு அடுத்த சித்தோடு அருகே ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு… போலீஸ் விசாரணை
ஈரோடு,
ஈரோடு அடுத்த சித்தோடு அருகே நசியனூரில் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் ஹோட்டல் நடத்தி வருபவர் அர்ஜூனன். அதே பகுதியில் மற்றொரு நபர் ஓட்டல் நடத்தி வருகிறார். தொழில் போட்டி காரணமாக இருவருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வியாபாரம் முடிந்து அர்ஜூனன் வழக்கம் போல் உணவகத்தை பூட்டி விட்டு சென்றார். இன்று அதிகாலை அர்ஜுனன் ஓட்டல் முன் ஒரு கார் நின்றது. காரை விட்டு இறங்கிய மர்ம நபர், ஓட்டல் மீது பெட்ரோல் குண்டை வீசினார்.
பெட்ரோல் குண்டு வெடித்து, ஓட்டல் தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்தவர்கள் சித்தோடு போலீசாருக்கும், பெருந்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். பெருந்துறை தீயணைப்பு நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கடையின் முன்புறம் இருந்த 2 பாலங்களும், மேற்கூரையும் தீயில் எரிந்து நாசமானது.
மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகிராமன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மோப்ப நாய் ஒன்றும் வரவழைக்கப்பட்டது.அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் பிடிக்கவில்லை. கடையின் முன்பு சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்த போது, இன்று அதிகாலையில் மர்ம நபர் ஒருவர் காரில் இருந்து இறங்கி ஓட்டல் மீது பெட்ரோல் குண்டை வீசியது தெரியவந்தது.
அதில் அந்த நபரின் முகம் தெளிவாக தெரிந்ததால் அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். தொழில் போட்டி காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது என காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஓட்டல் பெட்ரோல் குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.