வாஷிங்டன்: ஈரானுடனான மோதலில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான வழியை கண்டறிய வேண்டும் என அமெரிக்க கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் டான் கெய்ன் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போரின் தீவிரத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் தற்போது பரிசீலிக்கப்பட்டு வரும் ராணுவ நடவடிக்கைகள் எதிர்பாராத பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்க ஊடகமான சிஎன்என் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, ஈரானுக்கு எதிராக நடத்தப்படும் வான்வழித் தாக்குதல்கள் மட்டுமே அதிபர் டிரம்பின் இலக்குகளை அடைய போதுமானதாக இருக்காது என்பது ஜெனரல் டான் கெய்னின் மதிப்பீடாக உள்ளது.
ராணுவ இழப்புகள் குறித்து கவலை
ஈரானுடனான மோதலில் அமெரிக்க ராணுவத்திற்கு ஏற்பட்டு வரும் இழப்புகள் மற்றும் ஆயுதக் கையிருப்புகள் குறைந்து வருவது குறித்து கெய்ன் கவலை தெரிவித்துள்ளார். இதனால், அமெரிக்க வீரர்களை பாதுகாப்பதற்கான மாற்று வழிகளை ஆராய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் கருதுவதாக கூறப்படுகிறது.
ஈரானுக்குள் தரைப்படை வீரர்களை அனுப்புவதில் அதிபர் டிரம்ப் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார். அதற்கு பதிலாக வான்வழித் தாக்குதல்கள் மூலம் ஈரானை பேச்சுவார்த்தைக்கு கொண்டு வர முடியும் என அவர் நம்புகிறார். ஆனால், இந்த அணுகுமுறை எதிர்பார்த்த வெற்றியை அளிப்பது கடினம் என கெய்ன் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை
ஈரானுடனான போர் தற்போது முக்கியமான திருப்புமுனையை எட்டியுள்ளதாக கெய்ன் கருதுகிறார். இதுதொடர்பாக சிஐஏ இயக்குநர் ஜான் ரட்க்ளிப், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுடன் அவர் ஆலோசித்து வருவதாக சிஎன்என் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில், போரை தீவிரப்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து எச்சரித்தாலும், அதிபர் டிரம்புடனான தனது உறவு பாதிக்கப்படாமல் இருக்கவும் கெய்ன் கவனமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்திய வெள்ளை மாளிகை ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்காவின் குறைந்து வரும் வெடிமருந்து கையிருப்பு குறித்தும் அவர் எச்சரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், ராணுவ நடவடிக்கைகளை தொடர விரும்பினால் ஈரானின் ராணுவ திறனை முற்றிலும் சீர்குலைக்கும் அளவுக்கு அமெரிக்காவால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அவர் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.
