மத்திய டெக்சாஸ்: அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் பகுதியில் ராணுவத்தின் ஏ.எச்.-64 அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர் வயல்வெளியில் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த இருவரும் உயிரிழந்தனர். விபத்துக்குப் பின்னர் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக அருகிலிருந்த வீடுகளில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஃபோர்ட் ஹூட் ராணுவத் தளத்தை மையமாகக் கொண்ட ஏ.எச்.-64 அபாச்சி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கிளிஃப் கோல்மன், ஹெலிகாப்டரில் இருந்த இருவரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார்.
உள்ளூர் நேரப்படி மதியம் 1.30 மணிக்குப் பிறகு ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக அவசர உதவி எண் 911-க்கு தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்து ஏற்பட்ட இடத்தில் புல்வெளியில் தீப்பிடித்த நிலையில், அதிகாரிகள் அங்கு சென்றபோது தீ கட்டுக்கடங்காத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் எந்த வீடுகளின் மீதும் அல்லது கட்டிடங்களின் மீதும் மோதவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவராத நிலையில், ஃபோர்ட் ஹூட்டின் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணையை மேற்கொண்டு வருகிறது.
சம்பவ இடத்தை பாதுகாப்பது மற்றும் முதற்கட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதே உடனடி முன்னுரிமை என ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு அதிகாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
