உச்ச நீதிமன்றத்தில் தற்போது 33 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 21 பேரின் சொத்து விவரங்களை உச்ச நீதிமன்றம் நேற்று முன்தினம் இரவு தனது இணையதளத்தில் வெளியிட்டது. உச்ச நீதிமன்றத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலீஜியத்தில் உள்ள 5 நீதிபதிகளும் தங்கள் சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர். மேலும், பெண் நீதிபதிகளில் பீலா எம். திரிவேதி மற்றும் பி.வி. நாகரத்னா, பீலா திரிவேதி ஆகியோர் தனது சொத்து விவரங்களை வெளியிட்டுள்ளனர்.

தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா வரும் 13-ம் தேதி ஓய்வு பெற உள்ளதால் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற வரலாற்றில் நீதிபதிகளின் சொத்து விவரங்கள் பகிரப்படுவது இதுவே முதல் முறை. உச்ச நீதிமன்றம் வெளியிட்ட அறிக்கையில், “நீதிபதிகளின் சொத்து விவரங்களைப் பகிரங்கப்படுத்த ஏப்ரல் 1-ம் தேதி முழு நீதிமன்றமும் முடிவு செய்தது.
அதன்படி, இதுவரை பெறப்பட்ட நீதிபதிகளின் சொத்து அறிவிப்புகள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. மற்ற நீதிபதிகளின் சொத்து அறிவிப்புகள் பெறப்பட்டவுடன் பதிவேற்றப்படும்” என்று கூறப்பட்டது. உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான முழு நடைமுறையையும் உச்ச நீதிமன்றம் பகிர்ந்து கொண்டுள்ளது. நீதிபதிகளை நியமிப்பதில் உயர் நீதிமன்ற கொலீஜியத்தின் பங்கு, உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிசீலனைக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் வழங்கிய தகவல்களின் பங்கு ஆகியவை இதில் அடங்கும்.