மேட்டூர்: கேரளா மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் மழை காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பிய பிறகு, காவிரி ஆற்றில் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக, காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு நேற்று முன்தினம் 4-வது முறையாக மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது.
அதன் பிறகு, 16 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று இரவு வினாடிக்கு 35,400 கன அடியாகவும், இன்று காலை 45,400 கன அடியாகவும் நீர் வரத்து இருந்தது, ஆனால் மதியம் 12 மணிக்கு அது 60,400 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 60,000 கன அடியிலிருந்து 75,000 கன அடியாக அதிகரித்து திறந்து விடப்படுகிறது.

அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக 18,000 கன அடி தண்ணீரும், 16-கண் மதகு வழியாக 57,000 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது. கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையில் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது. அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நீர்வளத்துறை அதிகாரிகள் நீர் வரத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேட்டூர் அணை உதவி நிர்வாகப் பொறியாளர் செல்வராஜ், சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடி. அணையிலிருந்து வினாடிக்கு 75,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு வரும் நீர் முழுவதும் உபரி நீராக காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. எந்த நேரத்திலும் உபரி நீர் வினாடிக்கு 1,00,000 கன அடி வரை காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, காவிரி கரையோரங்களிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும். தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றார்.