காத்மாண்டு: பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசாங்கம் வியாழக்கிழமை முதல் நேபாளத்தில் பேஸ்புக், எக்ஸ், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களை தடை செய்துள்ளது. நேபாள தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிமுறைகளின்படி நாட்டில் செயல்படும் அனைத்து சமூக ஊடக நிறுவனங்களும் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28 அன்று, நேபாள அரசாங்கம் சமூக ஊடக நிறுவனங்களுக்கு பதிவு செய்ய 7 நாள் காலக்கெடுவை வழங்கியது. அந்த காலக்கெடு முடிவடைந்ததும், 4-ம் தேதி பதிவு செய்யாத 26 சமூக ஊடக தளங்கள் அங்கு தடை செய்யப்பட்டன. இந்த நிறுவனங்கள் பதிவு செய்யும் வரை தடை தொடரும் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. தற்போது, எக்ஸ், பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்கள் நேபாளத்தில் தடை செய்யப்பட்டுள்ளன.

நேபாள அரசாங்கத்தின் சமூக ஊடக தடையை பேச்சு சுதந்திர ஆர்வலர்கள் எதிர்த்துள்ளனர். மேலும், இது அரசாங்கத்திற்கு எதிராகப் பேசுபவர்களின் குரல்களை அடக்குவதற்கான நடவடிக்கை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அதே நேரத்தில், சமூக ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஒத்துழைக்கத் தவறியதற்கு அரசாங்கத்தின் கடுமையான நிபந்தனைகள் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் இந்து முடியாட்சி 17 ஆண்டுகளுக்கு முன்பு மே 2008-ல் முடிவுக்கு வந்தது. கடந்த 239 ஆண்டுகளாக இருந்த முடியாட்சியை ஒழிக்க பல ஆண்டுகளாக நடந்து வந்த போராட்டம் அப்போது முடிவுக்கு வந்தது. ஆனால் போராட்டத்தில் 16,000 பேர் இறந்தனர். அங்கு தற்போதைய ஆட்சியைப் பார்த்த பிறகு, முந்தைய முடியாட்சியே உயர்ந்தது என்ற மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டதாகத் தெரிகிறது.