அரியலூர்: மின்மாற்றியில் மோதிய அரசு பஸ் மோதிய சம்பவம் அரியலூரில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம், அரியலூரிலிருந்து சுத்தமல்லி, ஆலம்பள்ளம், காசாங்கோட்டை, ஸ்ரீபுரந்தான், காரைக்குறிச்சி வழியாக கும்பகோணம் செல்லும் அரசு பஸ் இன்று காலை அரியலூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.
ஆலம்பல்லம், காசாங்கோட்டை கிராமங்களுக்கு இடையே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த தனியார் பள்ளி பேருந்துக்கு வழி விடுவதற்காக அரசு பஸ்சை ஓட்டுநர் ராஜ்குமார், சாலையின் இடது ஓரம் வரை பேருந்தை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சாலையின் ஓரத்தில் இருந்த மின்மாற்றியில் பேருந்து மோதியுள்ளது. இதனால் பேருந்தின் பின்பக்க டயர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
அச்சமற்ற பயணிகள் அனைவரும் உடனடியாக பேருந்தில் இருந்து கீழே இறங்கி உள்ளனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் ராஜ்குமார், பேருந்தை பின்பக்கமாக எடுத்துள்ளார். பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் காயம் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். சாலை ஓரம் வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகள் மற்றும் பயணிகள் வயலில் இருந்த போர்ஷெட் தண்ணீரை அடித்து பேருந்தின் தீயை அணைத்தனர். ஓடும் பேருந்து மின்மாற்றியில் மோதி தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.