புதுடில்லி: இந்திய பெருங்கடலில் ஈரான் போர்க்கப்பலை அமெரிக்கா தாக்கிய சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கண்டனம் தெரிவித்துள்ளர்.
அமெரிக்காவால் இந்தியபெருங்கடலில் ஈரானின் போர்க்கப்பல் தாக்கப்பட்ட நிலையிலும் பிரதமர் மோடி அமைதியாக இருப்பதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
ஈரான் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ நிலைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில் இந்திய கடற்படையினருடன் பயிற்சியை முடித்துவிட்டு நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ஐஆர்ஐஎஸ் டெனா போர்க் கப்பலை அமெரிக்கா புதன்கிழமை தாக்கியது. இந்த தாக்குதலில் கப்பலில் பயணித்த 100 வீரர்களில் 80க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், ”இந்தியாவின் எண்ணெய் விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது, நமது இறக்குமதியில் 40% க்கும் அதிகமானவை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்கின்றன. LPG மற்றும் LNG ஆகிவற்றின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது.
இந்தியப் பெருங்கடலில் ஒரு ஈரானிய போர்க்கப்பல் மூழ்கியதால், மோதல் நமது கொல்லைப்புறத்தை எட்டியுள்ளது. ஆனாலும் பிரதமர் எதுவும் சொல்லவில்லை. இது போன்ற ஒரு தருணத்தில், நமக்கு ஒரு நிலையான கை தேவை. அதற்கு பதிலாக, இந்தியா நமது மூலோபாய சுயாட்சியை விட்டுக்கொடுத்த ஒரு சமரச பிரதமரைக் கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.