சென்னை: சட்டமன்ற உறுப்பினரானால் என்னை எடப்பாடி பழனிச்சாமியும், என்டிஏ கூட்டணியும் என்னை தத்தெடுத்துக் கொள்வார்கள் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சார வேனில் நின்றபடி ஊர்வலமாகச் சென்று இரட்டை இலைக்குவாக்கு சேகரித்த வேட்பாளர் ராஜேந்திர பாலாஜி பொதுமக்களிடையே பேசியதாவது, “இன்றைய தினம் தமிழ்நாட்டுக்கு போதைக் கலாச்சாரம் வந்து தலை விரித்தாடுகிறது . பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகிலேயே போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்து பல்வேறு வகையான போதை பொருட்கள் புழக்கத்தில் உள்ளது. இவற்றையெல்லாம் தடுத்து மாற்றி அமைக்க தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினால் தமிழகத்தை நிர்வாகம் செய்ய முடியவில்லை.
தமிழ்நாட்டில் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது. இதனை எல்லாம் தடுக்க, ஒடுக்க வேண்டும் என்றால் தேசிய ஜனநாயகக் கூட்டணியான அதிமுக ஆட்சி அமைந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வர வேண்டும். முந்தைய அதிமுக ஆட்சிக் காலங்களில் சட்டம் ஒழுங்கு மிகவும் சரியாக இருந்தது. விலைவாசிகள் கட்டுக்குள் இருந்து. மக்கள் பாதுகாப்பாக வாழ்ந்தார்கள். வியாபாரிகள் நிம்மதியாக இருந்தனர். இன்றைக்கு அனைத்து தொழில் வளங்களும் இல்லாமல் போய்விட்டது. எனவே அனைத்து தரப்பினர்களும் கஷ்டப்படுகின்ற நிலைமை மாறி, சட்டம் ஒழுங்கு சரி செய்யப்பட வேண்டும்.
திமுக கூட்டணியைச் சார்ந்தவர்கள் பொய்யான வாக்குறுதிகளை, வதந்திகளைச் சொல்லி உங்களிடையே வருவார்கள். நான் கட்சியிலும், அரசியலிலும், மக்கள் பிரதிநிதியாகவும், பல்வேறு பொறுப்புகளில் இருந்து மக்களுக்காக பணியாற்றி உள்ளேன்.
எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்களின் நல்லாட்சியான அதிமுக ஆட்சி தமிழகத்தில் வர வேண்டுமென்றால் அதிமுக 210- தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற வரலாற்றை நாம் உருவாக்க வேண்டும். பலமான அதிமுகவுடன் கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சிகள், பலம் வாய்ந்த அமைப்புகள் உள்ளன. அதிமுக தலைமையிலான கூட்டணி தான் நாட்டை ஆளுகின்ற கூட்டணி.
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக போகிறார். உங்கள் வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் அதிகாரம் மிக்க பொறுப்பில் நான் உருவாவேன். என்னை சட்டமன்ற உறுப்பினராக அனுப்பி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியும், என்டிஏ கூட்டணியும் என்னை தத்தெடுத்துக் கொள்வார்கள். விருதுநகர் மாவட்டத் தை நிரந்தரமான தொழில் பிரச்சனை இல்லாத மாவட்டமாக உருவாக்குவேன்.
விருதுநகர் மாவட்டத்தின் பட்டாசு,தீப்பெட்டி, அச்சு மற்றும் அதன் சார்பு தொழில் நிறுவனங்கள், விவசாயம், நெசவு போன்ற அனைத்து தொழில்களையும் பாதுகாக்க என்னுடைய வாழ்நாளை அர்ப்பணித்து என்றென்றும் உங்களுக்காக உழைப்பேன்” என்றார்.