சென்னை: பெயரிலேயே வெற்றி இருந்தாலும் விஜய் பெற்ற வெற்றியும் அடைந்த உச்சமும் யாரும் எதிர்பார்த்திராத ஒன்று. அது சினிமாவாக இருந்தாலும் சரி, அரசியலாக இருந்தாலும் சரி. விஜய் பெரிதாக கண்டுகொள்ளப்பட்டதாக ஒருவராக விமர்சனங்களால் விலக்கி ஒதுக்கப்பட்டவராகவே தனது பயணத்தை தொடங்கினார். ஆனால் காலமும் பொறுமையும் உழைப்பும் அவரை செதுக்கி செப்பனிட்டது.
படிப்பில் சுமார் என சொல்லப்பட்ட லயோலா கல்லூரி முதலாமாண்டு விஷூவல் கம்யூனிகேஷன் மாணவன் நடித்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்பதை தாண்டி கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளானது. விமர்சகர்கள், விஷயம் தெரிந்தவர்கள் என தத்தமது அலுத்துக்கொள்ளும் கருத்துக்களையும், ஏளன சிரிப்பையுமே அந்த படத்திற்கும் அதன் நாயகனுக்கும் தந்தனர்.
ஒடிசலான உடலில் ஒரு கருப்பு வார் பனியன், ஊதினால் பறந்துவிடும் உடல்வாகு, போதாதற்கு தமிழ்ச் சினிமா அறவே வெறுக்கும் கருப்பு நிறம் (ரஜினி, விஜயகாந்த் விதிவிலக்கு). ஒரு இயக்குநரின் மகன் என்பதாலேயே நடிக்க வந்துவிடுவதா, அதுவும் ஹீரோவாக, எல்லாம் கால்க்கொடுமை என்றது அன்றைய சினிமா சமூகம்.
ஆனால் அது வெறும் அன்றைய தீர்ப்பு தான். நாளைய தீர்ப்பை எழுதும் ஒரு தகத்தகாய ஆளுமை அந்த சுட்டெரிக்கும் விமர்சனங்களில் இருந்து பீனிக்ஸ் ஆக பிறக்கப்போகின்றார் என்பதை அறிந்து வைத்திருந்தவர் சிலரே. அதில் முதன்மையானவர் எஸ்.ஏ.சந்திரசேகர். ஒரு தந்தையாக மகனை நாயகனாக நிறுவும் கடமையை உணர்ந்த அவர் ஒரு இயக்குநராக போட்ட கணக்கு அவருக்கு கை கொடுத்தது.
அந்த கணக்கு தான் விஜயகாந்த். 1993 இல் சந்திரசேகர் இயக்கி வெளியான செந்தூரப்பாண்டி படத்தில் விஜயகாந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவருக்கு தம்பியாக, படத்தின் 2ஆம் நாயகனாக நடித்தது விஜய். செந்தூரபாண்டி விஜயகாந்த் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்று. ஆனால் விஜய்க்கு அது முதல் வெற்றி.
அடுத்த 33 ஆண்டுகளுக்கு விஜய்யை தமிழநாட்டின் செல்லப்பிள்ளையாக மாற்றிய வெற்றி அது. தன் மீதான விமர்சனங்களை ஒவ்வொன்றாக உடைக்க விஜய்க்கு பிள்ளையார்சுழி போட்டத் தந்த படம் அது. தொடர்ந்து 1994இல் முதன்மை நாயகனாக இளைய தளபதியாக தந்தை இயக்கிய ‘ரசிகன்’ படம் மூலம் தனது இன்னிங்க்ஸை தொடங்கினார் விஜய். கல்லூரி படிப்பை தொடர முடியாமல் போனாலும் சினிமா எனும் பல்கலைக்கழகம் அவருக்கு கற்றுத் தந்தது ஏராளம்.
ஆண்டுக்கு குறைந்தது 3 படங்கள் விஜய் நடிப்பில் வெளிவந்தன. ராஜ பார்வை, கோயம்பத்தூர் மாப்பிள்ளை என அடுத்தடுத்த படங்கள் விஜய் முகத்தை தமிழக மக்களுக்கு பரிட்சயமான ஒன்றாக மாற்றியிருந்தாலும் 1996 இல் வெளியான பூவே உனக்காக படம் அவரை மக்கள் மனதில் இடம்பெறச் செய்த முக்கிய மைல்கல். ஒரு தலையாக காதலித்த பெண்ணின் காதலுக்காக விஜய் மேற்கொள்ளும் முயற்சிகள், சினிமாவின் இருபெரும் ஆளுமைகளான நம்பியார் நாகேஷ் காம்போ அந்த படத்தை சென்டிமென்ட்டலாக கொண்டு சேர்ந்தது.
காதலர் துளிர்க்கும் இளம் தலைமுறையிடையே விஜய்யை அவர்களில் ஒருவனாக நிறுவிய படமும் இதுவே. 16 ஆண்டுகளுக்கு முன்பாக அளித்த பேட்டி ஒன்றில், “ஒரு கட்டத்தைத் தாண்டி உதவி செய்ய கையில் அதிகாரம் இருக்க வேண்டும். ஒரு கட்டம் வரைதான் ரசிகர் மன்றமாக, இயக்கமாக இருக்க முடியும். அதைத் தாண்டிவந்துவிட்டால் அதிகாரம் தேவைப்படுகிறது” என்றார் விஜய். அவர் காங்கிரசில் சேரப்போவதாகவும் செய்திகள் அடிபட்டன.
இலங்கை தமிழர் பிரச்னையை கண்டித்து சென்னை சேப்பாக்கத்தில் 2008ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் விஜய் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார். மக்கள் பணிகளுக்காக 2009ஆம் ஆண்டு ஜூலையில் விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு துவங்கப்பட்டது. 2012ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பிலும் 12-ஆம் வகுப்பிலும் நல்ல மதிப்பெண் பெற்றவர்களுக்கு விஜய் விருதுகளை வழங்கினார்.
2017ஆம் ஆண்டு அனிதா என்ற மாணவி மரணம் நிகழ்ந்த போது அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார் விஜய். 2018ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், கேரளாவில் வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு விஜய் நிதியுதவி அளித்தார்.
ஆட்சி அமைக்க பெரும்பான்மை இன்றி தவித்தது தவெக. பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தனது அதிகாரத்தின் மூலம் ஆட்சி அமைக்க அழைத்திருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இது மத்திய அரசின் முட்டுக்கட்டை என்ற விமர்சனம் எழுந்தது. 118 என்ற பெரும்பான்மைக்கு தவெக பெருமுயற்சி எடுத்தது. 3 முறை விஜய் ஆளுநரை சென்று சந்தித்தும் பயனில்லை. 5 இடங்கள் கொண்ட காங்கிரஸ் கூட்டணிக்கு வந்திருந்தாலும் மீதமுள்ள இடங்களுக்கு இழுபறி நீடித்தது.
வெற்றி பெற்றும் ஆட்சி அமைக்க முடியாமல் விஜய்க்கு முன் நின்ற மற்றொரு மாபெரும் சவாலாக இது அமைந்தது. இது விஜய் ஆட்சி அமைத்துவிடக்கூடாது என்று தரப்பட்ட நெருக்கடியாகவே பார்க்கப்பட்டது. இறுதியாக 2 கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு வழங்கின. ஆனாலும் பெரும்பான்மை வரவில்லை.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதை ஆனது. நீண்ட இழுபறிக்கு பின் விசிகவும் ஐயுஎம்எல் உம் ஆதரவு வழங்கின. 4வது முறையாக ஆதரவு கட்சித் தலைவர்களுடன் சென்று ஆளுனரை சந்தித்த விஜய்க்கு கிரீன் சிக்னல் கிடைத்தது.
இறுதியாக பெரும் பரபரப்பு ஓய்ந்து இன்று முதல்வர் பதவியேற்றார் விஜய். இதன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் புது சகாப்தம் பிறந்தது. சினிமாவாக இருந்தாலும் சரி அரசியலாக இருந்தாலும் சரி விஜய் முடியாது என்ற வார்த்தையே விஜய் அகராதியில் கிடையாது.