காத்மாண்டு: நேபாளத்தை உலுக்கிய திடீர் பெருவெள்ளத்துக்கு மத்தியில், பேரிடர் நிவாரணப் பொருட்களுடன் இந்திய விமானப்படையின் சி-130ஜே விமானம் விரைந்து அனுப்பப்பட்டுள்ளது.
பேரிடர் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்தியா மேற்கொண்ட இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கிடையேயான மனிதாபிமான ஒத்துழைப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்ட தகவல் வெளியானதைத் தொடர்ந்து, இந்திய விமானப்படையின் சி-130ஜே ரக விமானம் 10 டன் மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களுடன் இந்தியாவில் இருந்து புறப்பட்டது.
முதல் கட்டமாக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருட்கள் அன்றிரவே நேபாள தலைநகர் காத்மாண்டுவை சென்றடைந்தன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் வேகமாக செயல்படும் நாடாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருப்பதன் தொடர்ச்சியாக இந்த உதவி பார்க்கப்படுகிறது.
கொரோனா காலத்தில் பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசிகள் வழங்கியது முதல், துருக்கி, சிரியா, மியான்மர், இலங்கை உள்ளிட்ட பேரிடர் பாதித்த நாடுகளுக்கு மேற்கொண்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் வரை இந்தியா பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதனிடையே நேபாளத்தில் தனது செல்வாக்கை அதிகரித்து வரும் சீனாவும் அவசரகால நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதியுதவியை ஒருங்கிணைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், அந்த உதவிகளை வழங்குவதற்கான நடைமுறைகள் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
