நீலகிரி: செயல்படாமல் மூடிக்கிடக்கும் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்து, விலைமதிப்பற்ற உலோகத் துகள்கள் கலந்திருப்பதாகக் கூறப்படும் மண்ணைத் திருடிய வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுரேஷ் (46), மணிவண்ணன் (34), சதீஷ் (32), வினோத் குமார் (22) மற்றும் மற்றொரு சதீஷ் (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவன வளாகத்தில் இருந்து 7 சாக்கு மூட்டைகளில் மண்ணைத் திருடியதாக புதுமந்து காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
திருடப்பட்ட மண் மூட்டைகள் அருகிலுள்ள வனப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், அவற்றை விற்பனை செய்வதற்காக கோவைக்குக் கடத்த முயன்றபோது போலீஸார் கையும் களவுமாக பிடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் 7 மூட்டை மண்ணையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்தத் தொழிற்சாலை வளாகத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் உள்ள மண்ணில் வெள்ளித் துகள்கள் கலந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அந்த மண்ணை குறிவைத்து திருட்டு நடைபெற்றதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு மூடப்பட்டு, அங்கிருந்த இயந்திரங்கள் அகற்றப்பட்டன. தற்போது அந்த வளாகம் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
