சென்னை: சென்னை விமான நிலையத்தின் தற்போதைய நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து விமான நிலையம் தனியார் ஆபரேட்டர் வசம் செல்லுமா என்ற விவாதம் எழுந்துள்ளது.
ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு வெளியாகியுள்ள தகவலின்படி, கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமருக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும் அந்தக் கடிதத்தில், சென்னை விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறன், விமான இயக்கம் மற்றும் சரக்கு கையாளுதல் ஆகிய துறைகளில் மேலும் முன்னேற்றம் தேவைப்படுவதாக தமிழக அரசு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும் தமிழ்நாட்டுக்கு சர்வதேச தரத்திலான விமான நிலைய உள்கட்டமைப்பு அவசியம் என்றும், இதற்காக தற்போதைய நிர்வாக அமைப்பான இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துக்கு (AAI) பதிலாக வேறு ஆபரேட்டரை கொண்டு வர வேண்டும் என்றும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது AAI நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதம் சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டம் கைவிடப்படும் என்றும், தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் புதிய 5-வது முனையம் அமைத்து, எதிர்காலத்தில் ஆண்டுக்கு 5.5 கோடி பயணிகளை கையாளும் திறனை உருவாக்கும் திட்டம் குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், AAI-க்கு பதிலாக வேறு ஆபரேட்டரை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை, விமான நிலையத்தை தனியார் நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் முயற்சியா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், நிர்வாகத்தை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தனியார்மயமாக்கலுடன் நேரடியாக இணைப்பது குறித்து இறுதி முடிவு எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட சில அரசியல் தரப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. விமான நிலையத்தின் எதிர்கால நிர்வாகம் தொடர்பான அடுத்தகட்ட முடிவு மத்திய அரசின் நடவடிக்கையைப் பொறுத்தே இருக்கும்.
