லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் செய்தி சேகரிப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். சம்பவம் செய்தி நேரலைக்கு தயாராகிக் கொண்டிருந்தபோதே நிகழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சாட்வொர்த் பகுதியில் பஸ் விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்க NBC மற்றும் Telemundo நிறுவனங்களுக்காக பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர் அப்பகுதியில் பறந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஹெலிகாப்டர் திடீரென கட்டுப்பாட்டை இழந்து இரண்டு வர்த்தக கட்டிடங்களுக்கு இடையே விழுந்து நொறுங்கியது. பின்னர் ஹெலிகாப்டரில் தீப்பற்றியதுடன், அருகில் இருந்த வாகனங்களுக்கும் தீ பரவியது.
விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக NBC Los Angeles மற்றும் பிற செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மேலும் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதுடன், விபத்து ஏற்பட்ட பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.
விபத்து நடந்துகொண்டிருந்த சூழல் தொடர்பான காட்சிகள் செய்தி ஒளிபரப்பில் பதிவானதாகவும், அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெலிகாப்டர் எந்த காரணத்தால் கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
