
சென்னை: ராமநாதபுரம், ராமேஸ்வரம், புதுக்கோட்டையைச் சேர்ந்த 8 மீனவர்கள் கடந்த ஜூன் 26, ஜூலை 1, ஜூலை 11 ஆகிய தேதிகளில் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடலோரக் காவல்படையின் ரோந்துக் கப்பல் நள்ளிரவில் வந்து, தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் குற்றம்சாட்டினர்.
மீனவர்கள் 8 பேரையும் அடுத்தடுத்து கைது செய்து, படகுகளை பறிமுதல் செய்து, இலங்கைக்கு அழைத்துச் சென்று, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதையடுத்து, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவசர கடிதம் எழுதியுள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், இலங்கை அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராமநாதபுரம், ராமேஸ்வரம், புதுக்கோட்டையை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை நீதிமன்றம் விடுவித்து இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைத்தது. ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் இலங்கையில் இருந்து 8 மீனவர்களையும் இந்திய தூதரகம் சென்னைக்கு அனுப்பி வைத்தது.
தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் 8 மீனவர்களையும் விமான நிலையத்தில் வரவேற்று அரசு ஏற்பாடு செய்த வாகனங்களில் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.