சென்னை: இலங்கை அரசால் ஜன.26-ல் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 19 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை அரசு கைது செய்து அந்நாட்டு சிறையில் அடைத்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட 34 பேரும் இன்று இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
19 மீனவர்களை மட்டும் நிபந்தனையுடன் விடுதலை செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். மேலும், விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்களில் 16 பேருக்கு ரூ. 50,000, படகை ஓட்டிச் சென்ற 3 மீனவர்களுக்கு தலா தலா ரூ. 60.5 லட்சம் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 16 பேருக்கு 6 மாதமும், 3 பேருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள 15 மீனவர்களின் படகு எண்கள் தவறாக உள்ளதால் அவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் மறுத்துவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி அறிவித்துள்ளார். இதனிடையே, விடுதலை செய்யப்பட்ட 19 மீனவர்களையும் தமிழகத்திற்கு அனுப்பும் பணியை இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து, விடுவிக்கப்பட்ட மீனவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள்.