புதுடெல்லி: திமுக எம்பி டி.ஆர். பாலு, லோக்சபாவில் நேற்று பேசியதாவது:- தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மீனவர்கள் படும் துயரங்களை, சபையின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். எந்த ஆதாரமும் இல்லாமல் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்கிறது. அவர்களின் படகுகள் தடுத்து நிறுத்தப்படுவது மட்டுமின்றி மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றனர்.
இதில், கடந்த ஆண்டில் மட்டும் இதுபோன்ற 528-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. குறிப்பாக கடந்த 40 நாட்களில் 77-க்கும் மேற்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. இன்னும் 216 விசைப்படகுகளும், 97 மீனவர்களும் இலங்கை சிறையில் உள்ளனர். ஆனால் அவர்களை விடுவிக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதில் இலங்கை, தமிழக இரு மீனவ சமுதாயத்தினரையும் பாகுபாடின்றி ஒருங்கிணைக்க வேண்டும்.
மத்திய அரசால் இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாவிட்டால், அவர்களே தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இல்லையெனில், இப்பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.