கான் யூனிஸ்: ஜனவரி மாதம் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி ஹமாஸ் பயங்கரவாதிகள் தாங்கள் பிணைக் கைதிகளாக வைத்திருந்த இஸ்ரேலியர்களை படிப்படியாக விடுவித்து வருகின்றனர். பதிலுக்கு இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்கிறது. இந்நிலையில், நியூசீரத் நகரை சேர்ந்த ஒமர் வெங்கர்ட், ஒமர் ஷெம் டோவ், எலிஜா கோஹன் ஆகிய 3 இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் நேற்று செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தது.
அவர்கள் போலி ராணுவ சீருடை அணிந்து ஒரு வாகனத்தில் இஸ்ரேலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னதாக, ரபா நகரில் இருந்து 2 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். மேலும், ஹிஷாம் அல் சயீதும் காஸா நகரிலிருந்து விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்படும் 33 பணயக்கைதிகளில் கடைசியாக இந்த 6 பேர் இருப்பதாக கூறப்படுகிறது. 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி காசா எல்லையை ஒட்டிய இஸ்ரேல் பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் மீது ஏராளமான ஹமாஸ் பயங்கரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற வெளிநாட்டினர் உட்பட ஏராளமான இஸ்ரேலியர்களை அவர்கள் பணயக்கைதிகளாக பிடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.