ஜலந்தர்: பஞ்சாப்பிற்குள் வரும் போதைப்பொருட்களில் பெரும்பாலானவை குஜராத் வழியாக வருவதாக ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் நடைபெற்ற தொழிலதிபர்கள் மற்றும் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பஞ்சாப்பிற்குள் கடத்தி வரப்படும் போதைப் பொருட்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானவை குஜராத் மாநிலம் வழியாகவே வருகின்றன என்று குற்றம்சாட்டினார். பாஜக ஆட்சியில் குஜராத் போதைப்பொருள் நுழைவாயிலாக மாறிவிட்டதாகவும், லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுக்கு அரசியல் ஆதரவு வழங்கப்படுவதாகவும் அவர் விமர்சித்தார்.
சபர்மதி சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை விசாரிப்பதற்கே பஞ்சாப் போலீசாருக்கு சிரமம் இருப்பதாகவும், மத்திய அரசின் ஆதரவு காரணமாகவே அவர் தனது குற்றவியல் வலையமைப்பை இயக்க முடிகிறது என்றும் கூறினார்.
மேலும், முந்த்ரா துறைமுகத்தில் ரூ.21,000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்தையும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளை எலிகள் தின்றுவிட்டதாக கூறப்பட்ட விவகாரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.