சென்னை: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். காலையில் லேசான மூடுபனி காண வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 27: தமிழகத்தின் கடலோரப் பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிப்ரவரி 28: தமிழகத்தின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மார்ச் 1: தமிழகத்தில் மார்ச் 1-ம் தேதி 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
பொதுவாக காலையில் லேசான மூடுபனி காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
தென் தமிழக கடற்கரை, மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் பகுதிகளில் இன்று முதல் பிப்ரவரி 28-ம் தேதி வரை மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். வங்கக்கடலில் இன்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.