நாமக்கல்: அமைச்சர் அன்பில் மகேஷ் விமர்சனம்… ரயிலில் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றுவது போல குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து பாஜகவினர் கையெழுத்திட வைக்கின்றனர், என பாஜகவின் ‘சம கல்வி எங்கள் உரிமை’ கையெழுத்து இயக்கத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விமர்சனம் செய்தார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் தனியார் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாங்கள் மொழிபெயர்ப்பாளர்களை உருவாக்க ஆசைப்படவில்லை. அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் உருவாக்க ஆசைப்படுகிறோம். இதுவரை கல்வி கற்ற அனைவரும் இரு மொழிக் கல்வியில் தான் கல்வி கற்றுள்ளோம். எதற்காக மாணவ, மாணவிகளுக்கு 3 மொழிகளை திணிக்க வேண்டும்.
அவர்கள் ஆசைப்பட்டால் எத்தனை மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளட்டும். இது கட்டாயமாக இருக்கக்கூடாது என்பதுதான் எங்கள் எண்ணம். எந்த மொழிக்கும் நாங்கள் எதிரிகள் அல்ல. ஆனால் இந்தியை ஏற்றுக் கொண்டால் தான் நாங்கள் பணம் தருவோம் என்று கூறுவது ‘பிளாக் மெயில்’ ஆகும். கிருஷ்ணகிரியில் அரசுப் பள்ளி மாணவர்கள் சாதி ரீதியான துண்டு அணிந்து நடனமாடிய விவகாரத்தில், ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளிக் கட்டிடங்களை முதல்வர் திறந்துள்ளார். வரும் 2027-க்குள் 18,000 பள்ளி கட்டிடங்கள் கட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பாஜகவினர் நடத்தும் கையெழுத்து இயக்கம் குறித்து கேட்கிறீர்கள். ரயிலில் பிஸ்கட் கொடுத்து ஏமாற்றுவது போல குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுத்து பாஜகவினர் கையெழுத்திட வைக்கின்றனர்.
தமிழக குழந்தைகள் ‘நீட்’ வேண்டாம் என்று சொல்கின்றனர். அதைக் கேட்டு நீங்கள் ‘நீட்’ தேர்வை எடுத்து விட்டீர்களா? இவ்வாறு அவர் கூறினார்.