சென்னை: நடிப்பை தவிர்த்து கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் முன்னணி நடிகர் அஜித்குமார் (53), தமிழில் சமீபத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருகிறார். பெல்ஜியத்தில் உள்ள சர்க்யூட் டி ஸ்பா ஃபிரான்கார்சாம்ப்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த எண்டூரன்ஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்றார்.
12 மணி நேரம் நடந்த இப்போட்டியில் அஜித்குமார் உட்பட 3 டிரைவர்கள் மாறி மாறி காரை ஓட்டினர். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பயிற்சியின் போது அஜித்குமார் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. ஆனால், அஜித்குமாருக்கு காயம் ஏற்படவில்லை. காரின் முன்பகுதி மட்டும் சேதமடைந்ததாக அவர் தரப்பில் கூறப்படுகிறது. இதுபோன்ற கார் பந்தயங்களில் விபத்துகளால் காயம் அடைவது சகஜம் என்றும் கூறப்பட்டது.

ஏற்கனவே ஐரோப்பாவில் நடந்த கார் பந்தயத்தில் அஜித்குமார் அணி மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. அப்போது, வாகனம் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித்குமார் விபத்தில் சிக்கி காயமின்றி உயிர் தப்பினார். இந்நிலையில் மீண்டும் ஐரோப்பாவில் நடக்கும் கார் பந்தயத்தில் பங்கேற்க சென்று அதற்காக பயிற்சி மேற்கொண்டார். இந்த பயிற்சியின் போது, அவரது காரும் விபத்துக்குள்ளானது. தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்த அஜித்குமார் விபத்தில் சிக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மே 16 முதல் 18 வரை ஜான்வூர்ட் சர்கியூட்டில் நடைபெறும் கார் பந்தயத்தில் அஜித்குமார் பங்கேற்கிறார். மே 24-ம் தேதி மிசானோ வேர்ல்ட் சர்க்யூட், ஜூன் 26 முதல் 29 வரை ஸ்பா சர்க்யூட், ஜூலை 5-ம் தேதி சர்க்யூட் பால் ரிக்கார்ட், ஜூலை 18 முதல் 20 வரை மிசானோ சர்க்யூட், ஜெர்மனியில் ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 29-ம் தேதி பார்செல்லோனா டி பார்செல்லோனா, செப்டம்பர் 2-ம் தேதி பர்செல்லோனா, அக்டோபர் 2-ம் தேதி 12-ம் தேதி வரை கார் பந்தயங்களில் அஜித்குமார் தொடர்ந்து பங்கேற்கிறார். இத்துடன் அவர் தனது சீசனை முடித்துக் கொள்வார்.