டில்லி: துரந்தர் 2 படத்தில் ராணுவ நடவடிக்கை விவரங்கள் வெளியிடப்பட்டதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
துரந்தர் 2 படத்தில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள் வெளியிடப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை விசாரிக்குமாறு தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், சாரா அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற படம் துரந்தர் 1 மற்றும் துரந்தர் 2.
இரு பாகங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் வசூலையும் பெற்ற நிலையில், இன்று (மே 21) நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் துரந்தர் 2 வெளியாகிறது. இந்த நிலையில், துரந்தர் 2 படத்தில் நாட்டின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவகாரங்களை வெளியிட்டதாக தில்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
நாட்டின் ஆயுதப்படைகளின் செயல்பாட்டு உத்திகளும், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான விவரங்களும் துரந்தர் 2 படத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் உருவாக்கப்பட்டு வரும் மருந்துகள் தொடர்பான விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறி, இது நாட்டின் பாதுகாப்புக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், துரந்தர் 2 மீதான குற்றச்சாட்டை விசாரிக்குமாறு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்துக்கும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கும் உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், துரந்தர் 2 திரைப்படம் பொழுதுபோக்கு நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டிருந்தாலும், அதனால் ஏற்படுத்தும் தாக்கத்தை மறுக்க இயலாது. படத்தின் காட்சிகள் குறித்து மனுதாரர் எழுப்பிய கவலைகள் குறித்தும் அதிகாரிகள் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினர்.