செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு வரும் 31ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை: அக்.31க்கு ஒத்திவைப்பு… அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கின் விசாரணையை அக்.31க்கு ஒத்தி வைத்துள்ளது எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம்.
கடந்த 2011-15ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அந்த துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து இதுதொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்ட 46 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கடந்த 2015ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.
எனவே அதன்படி, இந்த வழக்கு விசாரணை சென்னை எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, இவ்வழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம், வழக்கை விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு எதிராக எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றப்பத்திரிகையில் உள்ள சில தகவல்களுக்கு மத்திய குற்றப்பிரிவு விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் 31ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.