
கான்பெரா: இந்திய கிரிக்கெட் அணியினர் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸை சந்தித்தனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் கடந்த வாரம் பெர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் இந்திய அணி டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் டிசம்பர் 6-ம் தேதி பகல்-இரவு போட்டியாக நடக்கிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய அணி, ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணியுடன் 2 நாள் பகலிரவு ஆட்டமாக விளையாடுகிறது. இந்தப் போட்டி கான்பெராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இந்நிலையில், கான்பெர்ரா சென்ற இந்திய அணியினர், நேற்று ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பேனிசை சந்தித்தனர். அப்போது, கேப்டன் ரோகித் சர்மா, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பேனீஸ்க்கு தனது அணி வீரர்களை அறிமுகப்படுத்தினார். அப்போது ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ரோஹித் சர்மா சுருக்கமாக பேசினார். அவர் தனது உரையில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இருதரப்பு உறவுகளின் வளமான வரலாற்றை எடுத்துரைத்தார்.
இந்திய அணி மற்றும் ஆஸ்திரேலிய பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிகளின் புகைப்படத்தை தனது X இணையதளத்தில் பதிவிட்ட பிரதமர் அந்தோணி அல்பானீஸ், “இந்த வாரம், மனுகா ஓவலில் பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக பிரதமர் அணி பெரும் சவாலை எதிர்கொள்கிறது. நான் சொன்னது போல். பிரதமர் மோடி அவர்களே, ஆஸ்திரேலிய அணி இந்த வேலையைச் செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.
அந்தோணி அல்பனீஸின் பதிவிற்கு பிரதமர் நரேந்திர மோடி தனது X இணையதளத்தில் பதிலளித்துள்ளார். அதில், “இந்திய அணி இந்த தொடரில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1.4 பில்லியன் இந்தியர்கள் மென் இன் ப்ளூ அணிக்காக வலுவாக வேரூன்றி உள்ளனர். வரவிருக்கும் போட்டிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.